சென்னை ஹைகோர்ட் உத்தரவை உடனே ஏற்ற புதுச்சேரி அரசு.. பேனர்கள் வைக்க அதிரடி தடை
பேனர்களுக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து தற்போது புதுச்சேரி அரசும் பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி: உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் வைப்பதை தடை செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததை அடுத்து தற்போது புதுச்சேரி அரசும் பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறுப்பிட்ட இடங்களில் மட்டும் பேனர்கள் வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது புதுச்சேரி அரசு.
தமிழகம் முழுவதும் பிறந்த நாள், திருமண நாள் தொடங்கி நினைவு நாள் வரையிலும், அரசியல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்துக்கும் பேனர் வைக்கும் கலாசாரம் மேலோங்கி உள்ளது. பல அடி உயரங்களுக்கு பேனர்களை வைப்பதால் சாலைகள் மறைக்கப்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் நிறைய பிரச்சனைகளும் வருகின்றன.
இதையடுத்து திருலோச்சன சுந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்த மனுவில் சில நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதன்படி உயிருடன் உள்ளவர்களின் புகைப்படங்கள்
தமிழ்நாட்டில் எங்கும் பேனர்களில் இடம் பெறக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தற்போது இதே போன்ற பேனர் பிரச்சனைகள் பலதை சந்தித்து வரும் புதுச்சேரி அரசும் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி இனி புதுச்சேரியிலும் எங்கும் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள் வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள போது புதுச்சேரி அரசு அதை சட்டமாக இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில் "புதுச்சேரியில் தமிழகத்தை போலவே பேனர்கள் வைக்க தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க முடியாது. ஆனாலும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பேனர் வைக்க அனுமதி அளிக்கப்படும்" என்று கூறினார். மேலும் ''தனியார் இடங்களில் பேனர் வைக்க வேண்டும் என்றாலும் அரசிடம் அனுமதி பெற்று தான் பேனர் வைக்க வேண்டும்'' என்றும் அவர் கூறினார்.
தமிழகத்திலோ எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊருக்கு ஊர் ஆளும் தரப்பினரே பேனர் வைத்துக்கொண்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசு ஹைகோர்ட் உத்தரவை மதித்து செயல்படுவது பாராட்டை பெற்றுள்ளது.