புதுவையில் பாரதியார் அமர்ந்து குயில் பாட்டு எழுதிய மாந்தோப்பு "குயில் தோப்பாக" மாறுகிறது!
புதுச்சேரி: புதுச்சேரியில் மகாகவி பாரதியார் அமர்ந்து குயில் பாட்டு உள்ளிட்ட பல அருமையான பாடல்களைப் புனைந்த கருவடிக்குப்பம் மாந்தோப்புக்கு விரைவில் பாரதி குயில் தோப்பு என்று பெயர் சூட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் நீண்ட கால கோரிக்கை நனவாகவுள்ளது. கடந்த 90களிலிருந்தே இதுகுறித்து கோரிக்கை விடுத்து வருகிறார் குமரி அனந்தன். சமீபத்தில் கூட அவர் நடைப்பயணம் மேற்கொண்டார்.
இந்தக் கோரிக்கை குறித்து குமரி அனந்தன் கூறுகையில், சென்னையில் தொடர்ந்து வாழ்ந்தால் ஆங்கிலேய அரசு தன்னை கைது செய்யக்கூடும் என்பதை அறிந்து, பிரெஞ்சு ஆட்சியில் இருந்த புதுச்சேரிக்கு 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பாரதியும், அவரது நண்பர் நெல்லையப்பரும் சென்றனர். பாரதி ரயிலேறி புதுச்சேரி சென்றதால்தான் நமக்கு அழியாத அற்புதமான எழுத்துகள் கிடைத்தன.
அவர் அமர்ந்து உலவி, கவி பாடிய கருவடிக் குப்பம் மாந்தோப்புக்கு பாரதி குயில் தோப்பு என பெயரிடுங்கள் என்ற கோரிக்கையை புதுச்சேரி முதல்வர்களாக இருந்த வைத்தியலிங்கம், ரங்கசாமி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று கூறியிருந்தார்.
குமரி அனந்தனின் இந்தக் கோரிக்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதியும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறுகையில் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிதைகளுள் ஒன்றான மகாகவி பாரதியின் "குயில் பாட்டு" தமிழுக்குக் கிடைத்திடக் காரணமாக அமைந்த இடம் புதுச்சேரி கருவடிக் குப்பத்தில் இருக்கும் மாந்தோப்பு.
பாரதியின் குயில்பாட்டின் நினைவாக புதுவை மாந்தோப்புக்கு "பாரதி குயில் தோப்பு" என்று பொருத்தமான பெயரிட வேண்டுமென 1990 முதற்கொண்டே இலக்கியச் செல்வர் நண்பர் குமரி அனந்தன் தொடர்ந்து கோரி வருகிறார். அவரது நீண்ட காலக் கோரிக்கை, புதுவை முதல்வர் நண்பர் நாராயண சாமி ஆட்சிக் காலத்திலாவது நிறைவேற வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறியிருந்தார்.
இன்று அவர்களது கோரிக்கையை ஏற்பதாக நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய மகாகவி பாரதியார் புதுவையில் வாழ்ந்து சுதந்திர கனலை ஏற்றும் பாடல்களை எழுதினார். அவர் பாடிய கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் உள்ள தோப்பை குயில் தோப்பாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த கோரிக்கைகளை தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் வலியுறுத்தி இருந்தார். தற்போது பாரதியார் பாடிய தோப்பு பகுதி வீடும், மனை பகுதிகளாக உருவாகி உள்ளது. இருப்பினும் அங்கு ஒரு பகுதியை தேர்வு செய்து பாரதியார் பாடிய குயில் தோப்பு என அமைச்சரவையை கூட்டி முடிவு எடுப்போம். பாரதியார் நினைவு நாளில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன் என்றார் நாராயணசாமி.
இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.