புதுவையிலும் அரசு கேபிள் டி.வி. : நிபுணர் குழு அமைக்கிறார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு கேபிள் டி.வி. தொடங்குவதற்காக விரைவில் நிபுணர் குழு உருவாக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் அரசு கேபிள் டி.வி. கழகம் தொடங்க வேண்டும் என்று சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் அதிக தொகை வசூலிப்பதாக குற்றம் சாட்டிய அ.தி.மு.க. உறுப்பினர் ஓம் சக்தி சேகர், நகராட்சிக்கு வரி செலுத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அதிகமான இணைப்புகள் இருந்தாலும் அதிகாரிகளிடம் குறைவான கணக்கையே காட்டுகின்றனர் என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளாக இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும், அரசு கேபிள் டி.வி. கழகம் தொடங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மற்றொரு அ.தி.மு.க. உறுப்பினர் புருசோத்தமன் குற்றம் சாட்டினார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சிகளின் யோசனையை வரவேற்பதாகவும், இதுபோன்ற கழகங்களால் நகராட்சிகளுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
"அரசு கேபிள் டி.வி. தொடங்குவதற்காக நிபுணர் குழு விரைவில் அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களில் கேபிள் டி.வி. செயல்முறை தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு கேபிள் டிவி கழகம் தாமதமின்றி தொடங்கப்படும்" என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.