"சாமியும், லிங்கமும் இருந்தால் காங்கிரஸ் கண்டம்"தான்.. புதுவை கண்ணன் டென்ஷன்!
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் இருக்கும் வரை காங்கிரஸ் வளராது. இருவரும் சேர்ந்து கட்சியை அழித்து விடுவார்கள் என்று புதுச்சேரி கண்ணன் கோபமாக கூறியுள்ளார்.
புதுச்சேரியின் "புரட்சித் தலைவராக" பார்க்கப்படுவர் கண்ணன். அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அவரது கோபாவேச பேச்சிலிருந்து....
சமீப காலமாக புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கப்பெறவில்லை. அரசின் பணிகளை செய்த கட்டுமானதாரர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவர்கள் வெளியூர்களுக்கு சென்று பணி செய்யும் நிலை ஏற்படுகிறது. நிதி நிலை பற்றி மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
பிற மாநிலங்களில் எல்லாம் சிறிய பிரச்சினைகள் என்றால் கூட முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். ஆனால் புதுவையில் எது நடந்தாலும் அமைச்சர்கள் பதில் அளிப்பதில்லை. மக்களுக்காக யாரும் கேள்வியும் கேட்பதில்லை. பணத்தை முதலீடு செய்து தொழில் செய்ய முடியாத நிலை புதுவையில் ஏற்பட்டுள்ளது. வட்டி கட்ட முடியாமல் திணறி வருகிறார்கள். இதற்கான காரணத்தை அரசுதான் தெரியப்படுத்த வேண்டும்.
புதுவை வரலாற்றிலேயே மிக மோசமான ஆட்சி தற்போது நடக்கிறது. பசுமையான மரம் பட்டுப்போய் உள்ளது. கெட்டுபோன இந்த ஆட்சி, விட்டு தொலைந்தால் பரவாயில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரங்கசாமியை யார் வேண்டுமானாலும் பாராட்டலாம், ஆனால் என்னால் பாராட்ட முடியாது. ரங்கசாமியை கண்டிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது.
நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு போலீஸ் ஐ.ஜி. பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இந்த மாற்றங்கள் தொடர வேண்டும் என விரும்புகிறோம். பொங்கல் பண்டிகைக்கு பிறகு கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்.
பணம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடுவதை மக்கள் கைவிட வேண்டும். அப்படியே பணம் பெற்றாலும் மாற்றத்துக்காக வாக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் நான் மூட்டை கட்டிக்கொண்டு அரசியலில் இருந்து வெளியேறி விடுவேன். 2016-ல் மாற்றம் வராவிட்டால் அரசியலில் இருந்து விலகி துறவறம் பூண்டு விடுவேன்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்வருடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொண்டு கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்கிறார்கள் என்று நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். கட்சி கூட்டத்திலேயே எம்.எல்.ஏ.க்களிடம் அரசு வீட்டில் ஏன் வசிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினேன். ஆனால் அப்போது காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அவர்களுக்கு வக்காலத்து வாங்கினார்கள். அவர்கள் இன்றைய நிலைக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?
புதுவை மக்களுக்காகவோ, தொகுதி மக்களுக்காகவோ காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ரங்கசாமியை சந்திக்கவில்லை. சுய லாபத்துக்காகத் தான் அவர்கள் முதல்வரை சந்திக்கிறார்கள். ஏனாம் எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவ், நான் அன்றும், இன்றும், என்றும் ரங்கசாமிக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறி உள்ளார். 2016-ல் மீண்டும் ரங்கசாமிதான் முதல்வர் ஆவார் என்று அவர் பேசி இருக்கிறார். இதைப்பற்றி கேள்விகேட்ட என்னை காங்கிரஸ் விரோதி என முத்திரை குத்தினர். ஏனெனில் இப்போது காங்கிரஸ் தலைவர்களாக இருப்பவர்கள் எல்லாம் புரோக்கர்கள்தான்.
மாநில காங்கிரஸ் தலைவர் என் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறி இருக்கிறார். அதோடு நான் கட்சியிலும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் எந்த ஒரு கட்சி நிகழ்ச்சிக்கும் என்னையோ, என்னை சாந்தவர்களுக்கோ தகவல் தெரிவிப்பதில்லை. என் மீதான புகாருக்கு அகில இந்திய தலைவிக்கு பதிலும் தெரிவித்துவிட்டேன். ஆனால் அவர்களும் என்னை அழைத்து பேசவில்லை. இதனால் ஒரு மாற்று முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆனால் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. காங்கிரஸ் கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று நாராயணசாமி கூறி இருக்கிறார். நாராயணசாமியும், வைத்திலிங்கமும் சேர்ந்துதான் காங்கிரசை அழிப்பார்கள். வேறு எந்த கொம்பனாலும் காங்கிரஸ் கட்சியை அழிக்க முடியாது. இதனால் தான் நான் எங்களை காங்கிரஸ் என்று சொல்கிறேன். இனி எங்களை கண்ணன் காங்கிரஸ் என்று கூட அழைக்கலாம் என்றார் அவர்.