கள், சாராயம்.. அடுத்து சூதாட கேசினோவும் வரப் போகிறது.. புதுச்சேரியில்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கள், சாராயம் போன்ற போதை வஸ்துக்கள் போதாது என்று அடுத்து சூதாட்டத்திற்கும் அரசே வழி வகுக்கப் போகிறதாம். இதை யூனியன் பிரதேசத்தின் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கள், சாராயக் கடைகள் உள்ளன. வெளிநாட்டு மது வகைகளும் தாராளமாக கிடைக்கும் குட்டி மாநிலம் புதுச்சேரி. அங்கு மது விலக்கை அமல்படுத்துவதற்கான சாத்தியமே இல்லை என்று அத்தனை கட்சிகளும் கூறி விட்டன.
இதுவரை புதுவையில் பெரிய அளவில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடந்ததில்லை. ஆனால் சமீப காலமாக அதுவும் தொடங்கி விட்டது. இந்த நிலையில் அடுத்து சூதாட்டத்தையும் அரசு அனுமதிக்கப் போகிறதாம்.
இதுகுறித்து புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுவை மாநிலம், ஆன்மீகம், சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆண்டு தோறும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அயல், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அந்த வகையில், கோவா மாநிலத்தில் உள்ளது போல் கேசினோக்கள் எனப்படும் சூதாட்ட கிளப்புகளை புதுவையில் தொடங்கும் திட்டம் உள்ளது. இவை சொகுசுக் கப்பல்களில் அமைக்கப்படும். இதில் புதுவையை சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே கேசினோக்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இத்திட்டம் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இத்திட்டம் குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றார் மல்லாடி.