புதுச்சேரி சிறுமிகள் பலாத்கார வழக்கு – 4 காம போலீசாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
புதுச்சேரி: புதுச்சேரி சிறுமிகளின் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரின் ஜாமீன் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனுஷா பாஷா, பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், போலீஸ் ஏட்டுகள் குமாரவேலு, பண்டரிநாதன், போலீஸ்காரர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகிய 9 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தவிர மற்ற 8 போலீசாரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்யவும் சி.ஐ.டி போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு பண்டரிநாதன், போலீஸ்காரர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகிய 4 பேரும் சி.ஐ.டி. போலீசில் சரணடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி இன்ஸ்பெக்டர் யுவராஜ் உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் யுவராஜ் உள்பட 4 பேருக்கும் ஜாமீன் மறுத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக ஒரு அறிக்கை தயார் செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்றுக்குள் தாக்கல் செய்யும்படி புதுவை சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சி.ஐ.டி போலீசார் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என்று முறையிட்டனர். சென்னை உயர் நீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.