மாணவி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்; 5 பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பொறியியல் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவை வில்லியனூர் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் வினோதினி (வயது 18). இவர் புதுவை மதகடிப்பட்டில் உள்ள என்ஜீனியரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி வினோதினி தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி தேர்வில் மாணவி வினோதினி குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கல்லூரி பேராசிரியர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த மாணவி வினோதினி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து வினோதினியின் தந்தை இளங்கோ போலீசில் புகார் செய்தார். மேலும், மாணவி வினோதினியின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தின. மதகடிப்பட்டு, வில்லியனூர் ஆகிய பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதற்கிடையில் மாணவி வினோதினியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அதோடு மாணவியின் தற்கொலை தொடர்பாக துணை தாசில்தார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து திருபுவனை போலீசார் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய தண்டனை சட்டம் 306-வது பிரிவின் கீழ் கல்லூரி பேராசிரியர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கல்லூரி பேராசிரியர் எர்னஸ்ட் பவுல், பவானி, கீதா, பிரியதர்சினி மற்றும் சேதுபதி ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
மதிப்பெண்களை திருத்தினாரா?
சமீபத்தில் நடந்த தேர்வில் மாணவி வினோதினி குறைவான மதிப்பெண் எடுத்திருந்தார். இது தனது பெற்றோருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மதிப்பெண்ணை திருத்தினாராம். இது கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகமும், விரிவுரையாளர்களும் அடிக்கடி வினோதினியை குற்றப்படுத்தி வந்திருக்கின்றனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
குண்டர்களை வைத்து தாக்குதல்
இதனிடையே மாணவியை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி விரிவுரையாளரை கைது செய்யக் கோரி பெற்றோர், உறவினர்கள், சக மாணவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி நிர்வாகத்தினர் 10க்கும் மேற்பட்ட குண்டர்களை வைத்து மறியலில் ஈடுபட்டவர்களை தாக்கியதாகவும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் எழுந்துள்ளது.