ராஜ்குமாரை மீட்டது எப்படி?- விவரிக்கிறார் தூதர் புதுவை சுகுமாறன்!
புதுவை: ராஜ்குமாரை மீட்டது எப்படி என்பது குறித்து விவரித்தார் தூதர் புதுவை சுகுமாறன் தெரிவித்தார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வீரப்பன் மற்றும் கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 108 நாட்கள் வீரப்பன் பிடியில் இருந்த ராஜ்குமார் அதே ஆண்டு நவம்பரில் விடுவிக்கப்பட்டார். இதற்கு முக்கிய பங்காற்றிவர்கள் என்றால் அவர்கள் நக்கீரன் கோபால், புதுவை மனித உரிமை ஆர்வலர் சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி, பழ நெடுமாறன் ஆகியோர் ஆவர்.
10 கோரிக்கைகள்
ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோபி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கடத்தல் குறித்து புதுவை சுகுமாறன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ராஜ்குமாரை கடத்திய சில நாட்களில் வீரப்பன் தரப்பினர் தமிழக- கர்நாடக அரசுகளிடம் 10 கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தமிழக- கர்நாடக அரசுகளால்..
இந்த கோரிக்கைகள் அனைத்தும் மனித உரிமைகள் சார்ந்தவை என்ற அடிப்படையில் நான், பேராசிரியர் கல்யாணி, பழ நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் வீரப்பனிடம் பேசி ராஜ்குமாரை பத்திரமாக மீட்பது என்று தமிழக- கர்நாடக அரசுகளால் அனுப்பப்பட்டோம்.
விடுதலை செய்தார்
இதன் அடிப்படையில் இரு முறை காட்டுக்கு சென்று வீரப்பனிடமும் அவர்களது குழுவினரிடமும் பேசினோம். முதல் கட்டமாக நாங்கள் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜை விடுவிக்க வீரப்பன் ஒப்புக் கொண்டார். அவர் ஒரு சர்க்கரை நோயாளி, அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என்று ராஜ்குமார் கேட்டுக் கொண்டதால் அவரை மட்டும் விடுதலை செய்தார்.
தடையை நீக்குவது
அடுத்த முறை நாங்கள் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி ராஜ்குமாரை மீட்டு கொண்டு வந்தோம். வீரப்பன் வைத்த 10 கோரிக்கைகளில் முக்கியமானது 1993-ஆம் ஆண்டு கூட்டு அதிரடி படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம், சதாசிவா ஆணையம் என்ற விசாரணை ஆணையத்தை உருவாக்கி விசாரணை நடத்தியது. அந்த விசாரணைக்கு கர்நாடக அதிகாரிகள் தடை விதித்தனர். அந்த தடையை நீக்க வேண்டும்.
எழுத்து மூலம்
அதுமட்டுமல்லாமல் பொய் வழக்கில் மைசூர் சிறையில் 124 தமிழர்கள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி அடைக்கப்பட்டிருந்தனர். அவற்றில் 12 பேர் பெண்கள். இந்த வழக்குகளில் இருந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். வீரப்பன் வைத்த கோரிக்கைகள் மக்கள் நலன் சார்ந்தவை. இதையடுத்து இரு மாநில அரசுகளும் கோரிக்கைகள் தொடர்பாக என்னென்ன செய்வோம் என்பதை எழுத்து மூலமாக அளித்தார்கள்.
பொறுப்பேற்கிறோம்
இந்த நேரத்தில் வீரப்பன் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றவது தவறு, எதையும் சட்டப்படி அரசாங்கம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாங்கள் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் வீரப்பனிடம் உத்தரவாதம் அளித்தோம். மேலும் ராஜ்குமாரை விடுவித்தால் இந்த கோரிக்கைகளை ஜனநாயக முறைப்படி நிறைவேற்ற நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று உறுதியளித்தோம்.
9 பேரும் விடுக்கப்பட்டனர்
இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மனித உரிமை ஆர்வலர் என்ற அடிப்படையில் நான் வரவேற்கிறேன். இந்த கடத்தலில் ஈடுபட்ட வீரப்பன், சந்திக கவுண்டர், ஊத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் உயிருடன் இல்லை. மற்றவர்கள் கடத்தினார்கள் என்பதற்கான ஆதாரமும் இல்லை. இதனால் 9 பேரும் விடுவிக்கப்பட்டனர் என்றார் சுகுமாறன்.