காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கும் யோசனைக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வெளியானது.
இந்த தீர்ப்பில் கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கான தண்ணீர் 177.25 டிஎம்சி என்ற அளவாக, குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவதற்கு வசதியாக காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைக்க உத்தரவிடப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த காலக் கெடு 29ம் தேதியுடன், முடிய உள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. மேலும், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை தான் அமைக்க வேண்டும் என்று உத்தரவில் எந்த இடத்திலும் கூறவில்லை என்று கூறியுள்ளார். மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக அதிகாரமே இல்லாத கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.