ஹேமலதா கையை கடிக்க.. பெண் போலீஸ் கன்னத்தில் அறைய.. புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் பரபரப்பு!
உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஆசிரம சகோதரி ஹேமலதா கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி: போராட்டம் என்றாலே பரபரப்புதான். அந்த போராட்ட பரபரப்பிலும் எல்லோருக்கும் ஹார்ட் பீட் எகிறி உச்சக்கட்டத்துக்கு சென்றது புதுச்சேரியில்தான்.
புதுச்சேரியில் உலக புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை சேர்ந்த ஹேமலதா சகோதரிகள் 5 பேர் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
கடலில் விழுந்தனர்
அரவிந்தர் ஆசிரமத்திலேயே பாலியல் பிரச்சனை இருப்பதாக இவர்கள் பரபரப்பு புகாரை கூறினர். இதில் ஹேமலதா உட்பட 5 சகோதரிகள் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் கடலில் போய் குதித்தனர். இந்த தற்கொலை முயற்சியில் தாயும், 2 சகோதரிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆனால் ஹேமலதா உள்ளிட்ட 3 சகோதரிகள், மற்றும் தந்தையும் உயிர் பிழைத்தனர்.
உண்ணாவிரத போராட்டம்
இதில், ஹேமலதா என்பவர், தங்களை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் கடைசிவரை எடுக்கப்படவே இல்லை. துணை நிலை ஆளுநரும் தன் புகார் மனுவுக்கு செவிசாய்க்கவில்லை. இப்படி கோரிக்கைகள் வைத்து கொண்டிருந்தால் பலன் இல்லை என்று நினைத்த ஹேமலதா துணை நிலை ஆளுநருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தலாம் என்று முடிவுக்கு வந்தார்.
தள்ளுமுள்ளு
அதன்படி இன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றார். ஆனால் ஹேமலதாவை அங்கிருந்த போலீசார், போராட்டம் நடத்தக்கூடாது என தடுத்து நிறுத்தினர். அபபோது போலீசாருக்கும் ஹேமலதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளுவில் கொண்டுபோய் விட்டது. ஒரு கட்டத்தில், போலீசாரை மீறி ஹேமலதா உள்ளே ஓடினார்.
கையை கடித்துவிட்டார்
அவரை ஒரு பெண் போலீஸ் இழுத்து பிடித்து தடுத்து நிறுத்த முயற்சித்தார். அவரிடமிருந்து விடுபட ஹேமலதா அந்த பெண் போலீசின் கையை இழுத்து பிடித்து கடித்துவிட்டார். இதனால் வலி தாங்க முடியாமல் பெண் போலீஸ் அலறினார். இன்னும் கடுப்பாகி போன அந்த பெண் போலீஸ், ஹேமலதாவின் கன்னத்தில் பளார் என அறை விட்டார். ஹேமலதா கையை கடித்ததும், போலீசார் கன்னத்தில் அறைந்ததும் என அந்த கவர்னர் மாளிகை முன்பு ஒரே பரபரப்பாகி விட்டது. இறுதியில் ஹேமலதாவை பெரியகடை போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.