காவிரி: தமிழகத்தை முந்திய புதுவை காங். அரசு- மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- நாராயணசாமி
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வருகிறது.
இது காவிரி நீரை நம்பியுள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளது. மேலும் ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் ஓரிரு நாட்களில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். வழக்கு தொடரப்படும் முடிவில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் வழக்கு தொடருவது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.