புதுக்கோட்டையில் பள்ளிகள், கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட சிபிஎம் வலியுறுத்தல்!
புதுக்கோட்டை: புதுகோட்டையில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தளங்களின் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட கவிவர்வமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்ட சபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். தேர்தல் வாக்குறுதியின் படி அவர் அரசு மதுக்கடைகள் திறக்கப்படும் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 12 மணியாக மாற்றியமைத்தார். மேலும் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி தமிழகத்திலுள்ள 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
புதுக்கோட்டை சாந்தநாதபுரம், திலகர் திடல், திருவப்பூர், சந்தைப்பேட்டை, பொன்னமராவதி நகர்பகுதி, கீரனூர் புலியூர் ரோடு, குறும்பூர், மேட்டுப்பட்டி, விராலிமலை நகர்பகுதி, வல்லவாரி, முள்ளங்குறிச்சி, மூக்கம்பட்டி, ராஜாலிப்பட்டி, காரையூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.இதில் திருவப்பூர், காரையூர், மேட்டுப்பட்டி ஆகிய கடைகள் மட்டுமே தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று அப்பகுதி மக்களால் போராட்டம் நடத்தப்பட்ட கடைகளாகும். மற்ற டாஸ்மாக் கடைகளெல்லாம் விற்பனை குறைவு என்பதாலேயே மூடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை பிருந்தாவனம் கடை, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் உள்ள கடை, மேட்டுப்பட்டி கடை வீதியில் உள்ள கடை, கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி, அறந்தாங்கி ஒன்றியம் மரமடக்கி, திருவரங்குளம், அரையப்பட்டி, பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையூர் உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இந்த டாஸ்மாக் கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை மூடியிருப்பது அப்பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் பள்ளி மற்றும் வழிபாட்டு தளங்களின் அருகே உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கோரிக்கை விடுத்துள்ளார்.