மனைவி கொலை விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த கணவர் தற்கொலைக்கு முயற்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மனைவி கொலை தொடர்பான விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கணவர் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி அருகேயுள்ள வாணங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது மனைவி ஸ்ரீரங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நாகுடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான சாட்சிகள் விசாரணைக்காக தனபாலை பாதுகாப்புடன் மூன்று போலீஸார் புதுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வந்தனர். அவரை முதல் மாடியில் உள்ள மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருந்தனர்.
அப்போது நீதிமன்றத்தில் நின்று கொண்டிருந்த தனபால் திடீரென மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், அவரது கால் முறிந்தது. மேலும், பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை முத்துலெட்சுமிரெட்டி அரசு மருத்துவமனையில் தனபால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக் கைதி நீதிமன்ற கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.