நெடுவாசல் போராட்டக்குழுவுடன் புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி பேச்சுவார்த்தை #NeduvasalProtest
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் போராடி வரும் மக்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை: விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் மக்களுடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ், காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நெடுவாசல் போராட்டத்திற்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும் தலைமை தாங்கவில்லை. அரசியல் கட்சி சார்ந்த விவசாய அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கவில்லை எனினும் திரை உலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து களத்திற்கு சென்று பேசி வருகின்றனர்.
போராட்டக் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்துப் பேசினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்படாது என்று உறுதிமொழி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முதல்வரின் வேண்டுகோள் குறித்து போராட்டம் நடத்தும் மக்கள் இன்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி காலை முதலே ஆலோசனை நடத்தினர். இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் கைவிடப்படுமா அல்லது தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட கண்காணிப்பாளர் லோகநாதன் ஆகியோர் நெடுவாசல் கிராம மக்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.