புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பி.ஏ. கொடூர கொலை.. காரில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
மாவட்ட கலெக்டர் பிஏ வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் பி.ஏ. மர்மநபர்களால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருப்பவர் பூபதி கண்ணன். இவர் திருச்சி காஜாமலையை சேர்ந்தவர். நேற்று வழக்கம்போல் காரில் பணிக்கு சென்ற பூபதி கண்ணன் நீண்ட நேரம் ஆகியும் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி போன் செய்து கேட்டபோது, விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவதாக பூபதி பாண்டியன் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், திருச்சி மாத்தூர் அருகே உள்ள அரைவட்ட சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நேற்று முதல் கார் அங்கேயே நின்று கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காருக்குள் சென்று எட்டி பார்த்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்டு கிடந்தவரை மீட்டு விசாரணையை துவக்கியதில் அதில் மாவட்ட ஆட்சியரின் பி.ஏ. பூபதி கண்ணன் என தெரியவந்தது. பூபதி பாண்டியன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காரணங்கள் என்ன என்பதும் குறித்தும், விரோதிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.