ராமேஸ்வரம் பிரிட்சோ சுட்டுக் கொலை.. புதுக்கோட்டையில் ஸ்டிரைக்கில் குதித்த மீனவர்கள்!
ராமேஸ்வர மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் மீனவர்கள் கண்டன வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதுக்கோட்டை: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ பலியானார். சரோன் என்ற மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
வேலை நிறுத்தம்
மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும், மீனவர் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெகதாப்பட்டினம் மீனவர்கள்
அடிக்கடி ஜெகதாப்பட்டின மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களும் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
மீனவர் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்ட துயர சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல இடங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
மீனவ குடும்பங்கள் கவலை
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால், இலங்கை சிறையில் உள்ள 85 மீனவர்களும் வீடு திரும்புவார்களா என்ற அச்சத்தில் மீனவ குடும்பங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எப்போது நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற கேள்வியை மீனவர்கள் எழுப்பி வருகின்றனர்.