கடைமடையை எட்டிப்பார்க்காத காவிரி நீர்.. புதுக்கோட்டையில் விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கல்லணை பாசன நீர் வராததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:கல்லணை பாசன நீர் வராததால் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் அம்மாநில அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக தமிழகத்திற்கு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் மழை பெய்யாமலேயே தமிழக ஆற்றங்கரையோரங்கள் வெள்ளக்காடானது. கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
கடைமடைக்கு நீர் வரவில்லை
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடை பகுதிக்கு மட்டும் தண்ணீர் வரவில்லை. இதனால் நாகை மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
30ஆயிரம் ஏக்கர்
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும் தண்ணீர் வர நடவடிக்கை கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கல்லணை பாசனம் உள்ள கடைமடை பகுதிகளுக்கு சில நாட்கள் வரும் தண்ணீரை நம்பி விதைத்த நெல்லும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் உறுதி
இந்நிலையில் ஆலங்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வல்லவாரியில் விவசாயிகளை திரட்டி போராட்டக்களம் அமைத்த நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் தண்ணீர் வரும் என்று எழுதிக் கொடுத்தார்கள். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
எட்டிக்கூட பார்க்கவில்லை
அடுத்த சில நாட்களில் நாகுடிக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் விவசாயிகளிடம் நாகுடிக்கு தினசரி 300 கனஅடி தண்ணீர் வரும் என்று உறுதியளித்தார். ஆனால் 100 கனஅடி கூட தண்ணீர் கிடைக்கவில்லை. அப்பகுதியில் உள்ள 160 பாசன ஏரி, குளங்களுக்கு தண்ணீர் எட்டிக்கூட பார்க்கவில்லை.
கரை பலவீனம்
இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் அமைச்சர் சொன்னபடி தினசரி 300 கன அடி தண்ணீர் வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கல்லணை கால்வாய் கரை பலமாக இல்லை என்று அதிகாரிகள் கூறிவந்தனர்.
4வது நாளாக போராட்டம்
அதனால் தான் நாகுடி பகுதி கடைமடைப் பாசன விவசாயிகள் 22 ந் தேதி காலை முதல் நாகுடி கல்லணை கால்வாய் அலுவலகத்தின் முன்னால் திரண்ட விவசாயிகள் கடைமடைக்கு தண்ணீர் வரும் வரை காத்திருக்கிறோம் என போராட்டம் நடத்தி வருகின்றன. அவர்களின் போராட்டம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது.