குடும்பப் பிரச்சினை... மகள்களுடன் விஷம் குடித்த தாய் மரணம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக கல்லூரி செல்லும் தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து விஷம் குடித்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு மகள்களும் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் தீர்த்தான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வடிவழகன் என்பவரது மனைவி சகுந்தலா. இந்தத் தம்பதிக்கு அஞ்சுகா, அமுதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
வடிவழகன் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். பொறியியல் படித்த அஞ்சுகா சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அமுதா பேராவூரணியில் ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வடிவழகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் வடிவழகன்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சென்னையில் இருந்து கொத்தமங்கலம் வந்த அஞ்சுகாவும், இளையமகள் அமுதாவும் அப்பாவைச் சமாதானம் படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், வடிவழகனின் கோபம் தீரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சகுந்தலா, தனது மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். மூவரும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.
மயங்கிக்கிடந்த சகுந்தலாவையும், அவரது மகள்களையும் அக்கம்பக்கத்தார் மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் சகுந்தலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது, அஞ்சுகாவிற்கும், அமுதாவிற்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக மகள்களுடன் தற்கொலைக்கு முயன்று, தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.