விபத்தில் சிக்கிய தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு வலது கையில் முறிவு.. ஒன் இந்தியாவுக்கு பேட்டி!
விபத்தில் சிக்கிய தினகரனின் ஆதரவாளர் புகழேந்திக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
திண்டுக்கல்: விபத்தில் சிக்கிய தினகரனின் ஆதரவாளர் புகழேந்திக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒன்இந்தியா தமிழ் தளத்துக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த புகழேந்தி தான் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வலது கை தோள்பட்டையில் மட்டும் வலி இருப்பதாக கூறிய அவர், ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.
சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி அவர்களின் பிரச்சார பீரங்கியாகவும் இருந்து வருகின்றார். இவர் நேற்று தனது காரில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். காரை அவருடைய டிரைவர் மேத்யூ என்பவர் ஓட்டினார். அவருடன் சேலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் சென்றார்.
தலைக்குப்புற கவிழ்ந்தது
புகழேந்தி சென்ற கார் திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள மேம்பாலத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் இடதுபக்க தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
புகழேந்திக்கு எலும்பு முறிவு
இதில் புகழேந்தி படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டது. ஜெயராஜ், மேத்யூ ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புகழேந்திக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
வலது கையில் முறிவு
இந்நிலையில் புகழேந்தியின் வலது கையில் மற்றும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகழேந்தி மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தினகரன் விசாரிப்பு
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் புகழேந்தியை தினகரன் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
தோள்பட்டையில் மட்டும் வலி
இதனிடையே ஒன்இந்தியா தமிழ் தளத்துக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த புகழேந்தி தான் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வலது கை தோள்பட்டையில் மட்டும் வலி இருப்பதாக கூறிய அவர், ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் 2 நாட்களில் வீடு திரும்பி விடலாம் என்றும் அவர் கூறினார்.
|
ஜெ. ஆன்மாவே காரணம்
அதேநேரத்தில் தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி விபத்தில் சிக்கியதற்கு ஜெயலலிதாவின் ஆன்மாவே காரணம் என சமூக வலைதளங்களில் மக்கள் பேசி வருகின்றனர். ஜெயலலிதா ஆன்மா உக்கிரமடைந்துவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுற்றும் சோதனைகள்
ஏற்கனவே இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு, வருமான வரித்துறை சோதனை, இரட்டை இலைச்சின்னம் கை நழுவியது, ஆர்கே நகரில் தொப்பி சின்னம் கிடைக்காமல் போனது என தினகரனை சோதனைகள் சுற்றிவரும் நிலையில் அவரது தீவிர ஆதரவாளரான புகழேந்தி விபத்தில் சிக்கியிருப்பது தினகரன் தரப்புக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.