புலி படத்தின் தாமதத்திற்கும் எங்களுக்கும் துளிக்கூட தொடர்பில்லை- வருமான வரித்துறை
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனை காரணமாக ‘புலி' படம் திரையிடுவது தாமதமான நிலையில் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாங்கள் விஜய் வீட்டில் சோதனை நடத்தினோம் ஆனால் புலி படத்திற்கு எந்தத் தடையையும் நாங்கள் விதிக்கவில்லை என்று கூறி இருக்கின்றனர்.
இன்று அதிகாலையில் புலி படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் என்று திரையரங்குகளில் அறிவித்து இருந்தனர். ஆனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இன்று காலை ஏமாற்றத்தையே சந்தித்தனர்.
நேற்று இரவு ‘புலி' படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் டிக்கெட் பணமும் திருப்பி கொடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் வருமான வரித்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். திட்டமிட்டே படத்தை நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார்கள்.
வருமான வரித்துறையினர் புலி படத்திற்கு தடை விதித்ததாக தகவல் பரவியது. காட்டுத்தீ வேகத்தில் பரவிய இந்தத் தகவலால் விஜயின் ரசிகர்கள் ஆங்காங்கே மோதல்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் புலி பட விவகாரத்தில் வருமான வரித்துறையினர் தங்கள் விளக்கத்தை அளித்திருக்கின்றனர்."‘புலி' படத்துக்கு வருமான வரித்துறை எந்தவித தடையும் விதிக்கவில்லை.
வருமான வரித்துறையினர் வழக்கமான சோதனைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ‘புலி' படம் திரையிடப்படாததற்கும், வருமான வரித்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேலும் நாங்கள் எந்தத் எந்த தடையையும் விதிக்கவில்லை" என்று தெரிவித்து இருக்கின்றனர்.
புலி படத்தை வெளியிடுவதற்கான அனுமதி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்களால் தான், புலி திரைப்படம் தாமதமாக வெளியானதாக கூறுகின்றனர்.