நவீனமயமானது தமிழக கேரள எல்லையின் புளியரை சோதனைச் சாவடி!
செங்கோட்டை: தமிழக - கேரளா எல்லையில் உள்ள புளியரை சோதனைச் சாவடி நவீனமயமாகியுள்ளது. அந்த சோதனைச் சாவடி இன்று முதல் திறந்து வைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள புளியரையில் வணிகவரித்துறை, வனத்துறை, கால்நடைத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை ஆகிய சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த வழியாக தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு சரக்கு ஏற்றி சென்று வருகின்றன. இங்கு இருந்து கேரளாவுக்கு செல்லும் சில வாகனங்களில் பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்டு கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனை சாவடியில் பிடிப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது புளியரை போலீஸ் சோதனை சாவடியை நவீன முறையில் புனரமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரடியாக புளியரை காவல் நிலையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த சோதனை சாவடியை தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சசாங் சாய் திறந்து வைத்தார்.
இந்த சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப் படுவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்வது தடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.