சாம்பார்ல ஏன் பருப்பு இல்ல... ரேசன்ல இருப்பு இல்ல மாமோய்!...
திருநெல்வேலி: ரேஷன் கடைகளில் உளுந்து, துவரம் பருப்புகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிச்சந்தையில் 3 மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாக இல்லத்தரசிக்கள் குமுறுகின்றனர்.
ஒரு கிலோ துவரம்பருப்பு வெளிச்சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இல்லத்தரசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் 1.92 கோடிக்கும் மேலான ரேசன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த ரேசன் கார்டுகளுக்கு 31 ஆயிரம் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்பட பல பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்படுகின்றன.
ரேசன் கடைகளில் பருப்பு
இந்த நிலையில வெளிசந்தையில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் பருப்பு வகைகள் 30 ரூபாய்க்கும், பாமாயில் பாக்கெட் ரூ.25க்கும் வழங்கும் திட்டம் திமுக ஆட்சியின் பொது கொண்டு வரப்பட்டது.
அதிக விலைக்கு பருப்புகள்
வெளி சந்தையில் உளுந்தம்பருப்பு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ரேசன் கடைகளில் ரூ.30க்கு கிடைத்ததால் பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர். இந்த நிலையில் இநத மாதத்திற்கான இருப்புகளில் ரேசன் கடைகளில் பருப்புகள் போதுமான அளவு விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பருப்பு பற்றாக்குறை
கடந்த 6 மாத காலமாகவே ரேசன் கடைகளுக்கு உளுந்தம் கருப்பு 10 சதவீதமும், துவரம்பருப்பு 50 சதவீதமும் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஓரு கார்டுக்கு தலா 1 கிலோ வீதம் 500 கிலோ மட்டுமே ஓதுக்கீடு செய்யப்பட்டது.
இல்லத்தரசிகள் ஏமாற்றம்
ஆனால் இந்த மாதம் அந்த ஓதுக்கீடும் இல்லாததால் பொதுமக்கள் பலர் ரேசன் கடைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து பருப்பு வாங்கும் அவல நிலைக்கு ஏழை எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பருப்பு இருப்பு இல்லை
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டையில் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த சந்திரா என்ற பெண் கூறும்போது, ‘‘கடந்த 2 மாதங்களாக உளுந்து, துவரம் பருப்பு கிடைக்கவில்லை. கேட்டால், சரக்கு இன்னும் வரவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் வெளிச்சந்தையில் கூடுதலாக 70 ரூபாய் கொடுத்து உளுந்து, துவரம் பருப்பு வாங்க வேண்டி உள்ளது. எனவே உடனடியாக ரேஷன் கடைகளில் உளுந்து, துவரம் பருப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்'' என்றார்.
இட்லி, சாம்பார் இல்லை
ரேஷன் கடையில் உளுந்து, துவரம் பருப்பு கிடைக்காததால் என்னுடைய வீட்டில் இட்லி போடுவதையோ, சாம்பார் வைப்பதையே குறைத்துவிட்டேன். என்னை போன்று பெரும்பாலானோர் இதே மனநிலையில் தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் இந்திராணி என்கிற இல்லத்தரசி.
காரணம் என்ன?
உளுந்து, துவரம் பருப்பு தட்டுப்பாட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய டெண்டர் விடுவதில் (விலை நிர்ணயத்தில்) இழுபறி ஏற்பட்டதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சமபந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் சொல்வாரா?