இறுதிக் கட்டத்தை எட்டியது புனலூர்-எடமன் அகல ரயில் பாதை… 14ம் தேதி ஆய்வு
புனலூர் எடமன் அகல ரயில் பாதைக்கான பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 13ம் தேதி இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
செங்கோட்டை: செங்கோட்டை-புனலூர் இடையே 49.5 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த மார்க்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனையடுத்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வரும் மார்ச் மாதத்தில் இருந்து ரயில்கள் ஓட துவங்கும் என ரயில்வே துறையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு வரை 20.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரயில் பாதையில் தண்டவாளங்கள் உறுதித்தன்மை ஆய்வு செய்யபட்டு பேக்கிங் நடைபெற்று முடிந்த நிலையில், ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நடைமேடை, இருக்கை வசதிகள், கட்டிடத்திற்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த பணிகளை வரும் மார்ச் மாதம் செங்கோட்டை- நியூ ஆரியங்காவு வழித்தடத்தில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு நடத்த உள்ளார். இந்த ஆய்வுக்கு பின்னர் முதல்கட்டமாக செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு இடையே அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், புனலூர்-எடமன் இடையே 27 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை பணிகள் முடிந்து வரும் 14ஆம் தேதி தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் பெங்களூரில் இருந்து 14ஆம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ரயிலை இயக்கி சோதனை செய்ய உள்ளார். இந்த ஆய்வுக்குப்பின் ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சோதனை நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் இந்த தடத்தில் செல்ல வேண்டாம் என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.