சோதனைக்கு அனுப்பிய பாலில் ரசாயனம் கலப்பு இல்லை...புனே லேப் அறிக்கை!
சோதனைக்காக தமிழகத்தில் இருந்து அனுப்பிய பாலில் ரசாயனம் இல்லை என்று புனே பரிசோதனை மையம் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தமிழகத்தில் இருந்து பரிசோதனைக்காக புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பிய பாலில் ரசாயனம் கலப்பு இல்லை என்று அந்த ஆய்வக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தனியார் பாலில் 100 சதவீதம் ரசாயன கலப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது. தமிழக அரசின் ஆய்வகத்தில் தானே முன் நின்று நடத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாகவும் அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 31ம் தேதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் புனேவில் உள்ள ஆய்வகத்தில் சில மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
ரசாயனம் இல்லை
இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் உள்ள தகவல்களை புனே ஆய்வகம் மறுத்த நிலையில், அறிக்கை இன்னும் கைக்கு கிடைக்கவில்லை என்று தமிழக அரசும் தெரிவித்துவிட்டது. தமிழக பால்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தனியார் நிறுவன பாலில் ரசாயன கலப்படம் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
கலப்படம் உண்டு
பாலில் ரசாயனம் இல்லை என்று முடிவுகள் வந்தாலும், அதில் கலப்படம் செய்யப்படுகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக தெரிகிறது. கடந்த 2016ம் ஆண்டு ஈரோட்டில் தனியார் நிறுவன பாலில் கொழுப்பின் அளவு குறித்து ஆய்வு செய்த போது அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
226 வழக்குகள்
இதனிடையே சட்டசபையில் நேற்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிக்கையாளர்களிடம் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக கூறியதாக தெரிவித்தார். மேலும் கடந்த 6 ஆண்டுகளில் பாலில் கலப்படம் செய்த 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
புனே அறிக்கை
இந்நிலையில்தான் புனே ஆய்வக அறிக்கை வந்துள்ளது. இதில் பாலில் ரசாயன கலப்படம் இல்லை என்பது தெளிவாகி உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.