மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான்- புனிதா வாக்குமூலம்
பொருளாதார சிக்கலில் சிக்கியதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தேன் என்று கோவை புனிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
கோவை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என்று கோவை விடுதி காப்பாளர் புனிதா போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் தனியார் மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கி பணிக்கும் கல்லூரிக்கும் சென்று வந்தனர். இந்த ஹாஸ்டல் ஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமானது.
இதன் வார்டனாக புனிதா (32) இருந்தார். இவர் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிகளை பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று குடிபழக்கத்தை கற்று கொடுப்பது வழக்கமாம்.
புகார்
இவரும் எப்போதும் போதையிலேயே இருப்பார் என்று மாணவிகள் கூறினர். இந்நிலையில் இவர் மாணவிகளை வாட்ஸ் ஆப் கால் மூலம் விடுதி ஓனர் ஜெகந்நாதனுடன் பேசுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் 4 பெண்களை ஜெகந்நாதனுடன் உறவுக் கொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் கூறினர்.
கிணற்றில் சடலமாக மீட்பு
இதுகுறித்து பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையறிந்த ஜெகந்நாதனும் ,புனிதாவும் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் ஜெகந்நாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
14-ஆம் தேதி வரை காவல்
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வரும் புனிதா கடந்த 1-ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
உண்மையை ஒப்புக் கொண்ட புனிதா
இந்நிலையில் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கேட்டனர். அதன்படி புனிதாவை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. புனிதாவிடம் நடத்திய விசாரணையில் தான் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் இத்தனை நாட்கள் தான் சென்னை இருந்ததாகவும் புனிதா வாக்குமூலம் அளித்தார்.