பாஜகவை பஞ்சாப் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர்.. திருநாவுக்கரசர் மகிழ்ச்சி
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவை அம்மாநில மக்கள் தூக்கி எறிந்துள்ளனர் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர் என்று அம்மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், பஞ்சாப் மாநில மக்கள் பாஜகவை தூக்கி எறிந்துள்ளனர் என்று கூறினார். மேலும், மக்கள் ஏற்காததால்தான் பஞ்சாப்பில் பாஜக தோற்றுப் போனது என்று தெரிவித்த திருநாவுக்கரசர், கோவாவிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும் மாநில பிரச்னைகளின் அடிப்படையில்தான் அந்தந்த மாநிலத் தேர்தல் முடிவுகளை பார்க்க வேண்டுமே ஒழிய ஒட்டு மொத்த இந்தியாவிற்கான தேர்தல் முடிவுகளாக இதனை பார்க்கக் கூடாது என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன் என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.