சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை... புதிய நீதிக்கட்சி அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் இம்முறை போட்டியிடவில்லை என்றும், தங்களின் முக்கிய கோரிக்கையினை ஏற்கும் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகவும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த லோக்சபாத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தது புதிய நீதிக்கட்சி. வேலூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார்.
இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் கேட்கப்பட்ட தொகுதிகளை பாஜக ஒதுக்க மறுத்ததால், கூட்டணியில் இருந்து வெளியேறினார் சண்முகம்.
அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழக சட்டசபைத் தேர்தலில் புதியநீதிக் கட்சி போட்டியிடப் போவதில்லை என சண்முகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத வகையில் திமுக, அதிமுக உட்பட ஐந்து அணிகள் தேர்தல் களத்தில் சந்திக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, ஆட்சி கட்டிலில் அமர விரும்பும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு, ஒரு கோரிக்கையை வைக்கின்றேன்.
நீங்கள் அனைத்து முதலியார், செங்குந்தர், அகமுடையர், பிள்ளைமார், சேனைத்தலைவர் ஆகிய பிரிவுகளைத் சேர்ந்த பல்வேறு பட்டபெயர்களில் அழைக்கப்படும் வெள்ளாளப் பெருமக்களுக்கு குறைந்தபட்சம் வறுமை கோட்டிற்கு கீழேயுள்ளவர்களுக்கு, கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீடு பட்டியலில் அல்லது தனி இட ஒதுக்கீடோ வழங்குவோம் என்று தங்கள் தேர்தல் வாக்குறுதியாக, பகிரங்கமாக அறிவிக்கும் கூட்டணிக்கு, புதிய நீதிக்கட்சி கடந்த 17 ஆண்டுகளாக எங்களின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆற்றிய உழைப்பை தியாகம் செய்து, தனது நிபந்தனையற்ற முழுமையான ஆதரவினை தெரிவித்து கொள்கிறது.
கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 11,000 வாக்குகள் பெற்ற வேலூர் நாடாளுமன்ற தொகுதியில், கடந்த 2014ல் நடைபெற்ற தேர்தலில் புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டு, குறைந்த கால அவகாசத்தில், கிடைத்த 21 நாட்கள் மட்டுமே தேர்தல் களத்தில் பணியாற்றி, 3,25,000 வாக்குகளைப் பெற்று, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தோம்.
புதிய நீதிக் கட்சி இந்த தேர்தலில் போட்டியிலிருந்து முழுமையாக விலகுவதுடன், எங்களின் முக்கியமான இக்கோரிக்கையினை ஏற்கும் கூட்டணியின் வெற்றிக்கு, தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும், 2014ல் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பணியாற்றியது போல, எங்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மேலே குறிப்பிட்ட எங்கள் அத்துணை சமுதாய மக்களும் தமிழகம் முழுவதும் அயராது பாடுபடுவார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.