புதிய தலைமுறை அலுவலக குண்டு வெடிப்பு… மார்ச் 18ல் சி.பி.எம், வி.சி கண்டன ஆர்ப்பாடம்
சென்னை: புதிய தலைமுறை டிவி டிபன்பாக்ஸ் குண்டு வீச்சு தொலைக்காட்சி தாக்கப்பட்டதை கண்டித்து 18-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்தும், கருத்துரிமை மீது ஏவி விடப்படும் வன்முறைகளைக் கண்டித்தும் வரும் 18-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பத்திரிகையாளர்கள் ‘இந்து' என்.ராம், ஞாநி, அ.மார்க்ஸ், ஆர்.எஸ்.மணி, மாலன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இவ்வாறு இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தாலி பிரச்சினையை மையப்படுத்தி நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சிக்கு எதிராக இந்து அமைப்புகள் கடந்த மார்ச் 8 ஆம் தேதி போராட்டம் நடத்தின. இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சிலர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் சரணடைந்தார் 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.