ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி, ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா மனு தக்கல்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாராம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாராம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதற்காக இன்று காலை ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்து அலுவலர் சிவகாமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் ஜவாஹிருல்லா, இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று காலை 11.40 மணியளவில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், அந்த தொகுதியின் தேர்தல் அலுவலரான ராம பிரதீபனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சைதாபேட்டை தொகுதி போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான அலை வீசுவதாக கூறினார்.
இதேபோல வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.