புதிய தலைமுறை டிவி குண்டு வீச்சு: சிபிஐ விசாரணை கோரும் ராம கோபாலன்
சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று சில விஷமிகள் வெடிகுண்டு வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு யார் காரணமாக இருந்தாலும், அந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மத்திய புலானாய்வு துறை முழுமையான விசாரணைக்கு உத்திரவிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்தகைய சமூக விரோத செயலுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இதற்கு முன்பு தினத்தந்தி அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய, தினமலர் அலுவலகத்திற்கும் மிரட்டல் விடுத்த குற்றவாளிகளையும் காவல்துறை கண்டுபிடித்துத் தண்டிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகள் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.