புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்றும் கருணாநிதியை டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வாசுதேவநல்லூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகள் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் போட்டியிடும் சின்னம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த 4 தொகுதிகளும் தனித் தொகுதிகளாகும்.