வர்லாம்..வர்லாம்..வீடு முன்பு கலகம் செய்யப் போவதாக அறிவித்த புதிய தமிழகம் கட்சிக்கு பாலபாரதி அழைப்பு
தம்முடைய வீடு முன்பு கலகம் செய்ய வருகை தரும் புதிய தமிழகம் கட்சியினரை வரவேற்பதாக பாலபாரதி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்: டாக்டர் கிருஷ்ணசாமியை விமர்சித்ததற்காக தமது வீடு முன்பு கலகம் செய்யப் போவதாக அறிவித்த புதிய தமிழகம் கட்சியினரை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூர் அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியோ அனிதா மூளை சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்; சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
அம்பலப்படுத்திய பாலபாரதி
இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி தமது மகளுக்கு ஜெயலலிதாவின் பரிந்துரையில்தான் மெடிக்கல் சீட் வாங்கினார். இது சட்டசபை விவாதத்திலேயே இடம் பெற்றிருக்கிறது என உண்மையை போட்டுடைத்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
அநாகரீக பதில் தந்த டாக்டர்
இதற்கு பதில் தந்த டாக்டர் கிருஷ்ணசாமி, அந்த பொம்பளைய நான் சட்டசபையிலேயே பார்த்தது கிடையாது என அநாகரீகமாக பேசினார். இதற்கும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. பாலபாரதியும் கிருஷ்ணசாமிக்கு காட்டமாக பதிலடி தந்தார்.
போராட்டம் அறிவிப்பு
இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள பாலபாரதி வீட்டையும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர். இதற்கும் பாலபாரதி தம்முடைய ஸ்டைலில் பேஸ்புக்கில் பதிலடி கொடுத்துள்ளார்.
வர்ர்லாம் வர்லாம்...
இது தொடர்பான பாலபாரதியின் ஃபேஸ்புக் பதிவு:
இன்று எங்களது இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தையும் வீட்டிற்கு முன்னாலும் புதியதமிழகம் கலகம் செய்யப்போவதாக அறிவிப்புசெய்துள்ளார்கள்.
பொய் கலகம் செய்யும்.
உண்மை புரட்சி செய்யும்.
# வர்ர்லாம் வர்லாம்...