கோயம்பேடு போனா தக்காளி வாங்கலாம்.. புழல் ஜெயிலுக்குப் போனா.. முயல் வாங்கலாம்!
சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள பலசரக்கு கடையில் விதம் விதமான பொருட்கள் படு சூடாக விற்பனையாகி வருகிறது. இந்தக் கடையில் பலவிதமான பொருட்கள் விற்பனையாகின்றன.. முயல் கூட விற்கிறார்கள்.
பிரிசன் பஜார் அல்லது சிறை அங்காடி என்ற பெயரில் உள்ள இந்த கடையில் விதம் விதமான பொருட்களை விற்கிறார்கள். விசேஷம் என்னவென்றால் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கைதிகளே செய்ததாகும்.
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த கடை இது.
பேக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன. கூடுதலாக தற்போது முயலும் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். இந்த முயல்களை கைதிகளே, சிறை வளாகத்திற்குள் வளர்க்கிறார்கள். நன்கு வளர்ந்ததும் இந்த முயல்களை சிறை அங்காடி மூலம் விற்பனை செய்கிறார்கள்.
எடைக்கேற்ப முயல்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிறைக்கு வருவோர், சிறைப் பக்கமாக வருவோர், காவல்துறையினர், சிறைத்துறையினர் என சகலரும் இந்த கடைக்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.
விலையும் சகாயம்தான். அதிகம் கிடையாது. பொருட்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கடைKளில் போர்வை, செருப்பு, படுக்கை விரிப்புகள், மிட்டாய்கள், கேக்குகள் என பல விதமான பொருட்கள் விற்பனையாகின்றன.
இதுபோக சிறை வளாகத்திலேயே தேக்கு மர வளர்ப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை ஒன்றையும் நிர்மானித்துள்ளனராம் சிறை அதிகாரிகள். கைதிகளே இந்த பண்ணையைப் பார்த்துக் கொள்கின்றனர்.