கைதியின் வாய்க்குள் எடுக்க எடுக்க பிளேடுகள்.. சென்னை போலீசார் அதிர்ச்சி
புழல் கைதியின் வாய்க்குள் பிளேடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Recommended Video
சென்னை: சிறைக்கைதி ஒருவர் பாதுகாப்பு போலீசார்கள் உடனிருந்தும் நீதிமன்ற வளாகத்திலேயே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
திருட்டு ஒன்றில் ஈடுபட்ட குற்றத்திற்காக மடிப்பாக்கம் போலீசார் பிரபாகரன் என்பவரை கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கைது செய்து புழலில் அடைத்திருந்தனர். ஆனால் இது இவரது முதல் குற்றம் இல்லை. இவர் மீது நீலாங்கரை, மடிப்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அவர் மீதிருந்த வழக்கு ஒன்றில் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது. இதற்காக புழலிலிருந்து பிரபாகரனை 3 போலீஸார் பாதுகாப்பாக அவரை அழைத்து வந்தனர். கோர்ட்டில் விசாரணையும் நடைபெற்று, மீண்டும் சிறை செல்ல பிரபாகரனை போலீசார் வேனில் அவரை ஏற சொன்னார்கள்.
அப்போது வேனுக்குள் ஏறாமல், பிரபாகரன் தன் வாயில் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்தை சரசரவென அறுத்து கொண்டார். அவருடன் இருந்த 3 போலீசார்களும் அதிர்ச்சியடைந்து, அவரை மேலும் பிளேடினால் அறுத்து கொள்ளாமல் தடுத்தனர். என்றாலும் அவர் பலமாக பிளேடால் அறுத்ததால் ரத்தம் பொலபொலவென கொட்டியது. இதையடுத்து 3 போலீசாரும் உடனடியாக அவரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கழுத்தில் தையல் போடப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
ஆனால் கழுத்தில் தையல் போட முயன்றபோது போலீசார்களும், மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், பிரபாகரன் வாய்க்குள் பிளேடு துண்டு இருந்த போல் தெரிந்தது. அதை வெளியே எடுத்தனர். ஆனால் அப்போதும் பிளேடு துண்டு இருந்தது போல் இருந்தன. எடுக்க எடுக்க பிளேடு துண்டுகள் வந்துகொண்டே இருந்தன. இவ்வாறாக 10-க்கும் மேற்பட்ட பிளேடு துண்டுகள் இருந்தன. 3 பேர் காவலுக்கு இருந்தும் பிளேடு துண்டுகள் எப்படி வந்தன? சிறையிலிக்கும் கைதியிடம் இவ்வளவு பிளேடு துண்டுகள் எப்படி கிடைத்தன? என்பன குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.