4வது கட்ட பிரசாரத்தைத் தொடங்கியது மக்கள் நலக் கூட்டணி
சென்னை: திமுக, அதிமுக ஆகிய பெரும் கட்சிகள் எல்லாம் அடுத்த அடியை எடுத்து வைப்பதற்குத் தடுமாறிக் கொண்டுள்ள நிலையில் தங்களது அணியின் 4வது கட்ட பிரசாரத்தை மக்கள் நலக் கூட்டணி இன்று சென்னையில் தொடங்கியது.
மக்கள் நலக் கூட்டணிதான் தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் உருவான முதல் கூட்டணி. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்தக் கூட்டணி இதுவரை 3 கட்டமாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. முதல் பிரசாரக் கூட்டம் கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடலூரில் தொடங்கியது.
இந்த நிலையில் இன்று தங்களது 4வது கட்ட பிரசாரத்தை கூட்டணி தலைவர்கள் இன்று சென்னையில் தொடங்கினர். மக்கள் நல கூட்டணியின் 4 ஆம் கட்ட மாற்று அரசியல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று பெரம்பூரில் பிரச்சார பொதுக்கூட்டமாக நடந்தது.
இந்தக் கூட்டத்தில் திருமாவளவன்,வைகோ,ஜி.ராமகிருஷ்ணன்,இரா.முத்தரசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தலைவர்கள் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு பொதுக்கூட்ட மேடையில் ஆள் உயரமாலையும்,வீரவாளும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.