புரமோஷனைக் காணோம்.. ஓய்வு பெற்றவர்களுக்கு 'எக்ஸ்டென்ஷன்'... பி.டபிள்யூ.டி என்ஜீனியர்கள் அதிருப்தி!
சென்னை: பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பொறியாளர்களை காலிப் பணியிடங்களில் நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு தருவதைக் கண்டித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழக பொதுப்பணித்துறையில் 7 தலைமைப் பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் சில பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல கண்காணிப்புப் பொறியாளர் பணியிடங்களும் பல காலியாக உள்ளன. இதனால் வேலைகள் பல சுணக்கமாகியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பொதுப்பணித்துறைக்கான பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணிகள், திட்டப் பணிகளை இறுதி செய்வது உள்ளிட்ட பல பணிகளும் தடைபட்டுப் போய்க் கிடக்கின்றன. குறிப்பாக முக்கியமான நீர்வள ஆதாரத்துறையில்தான் பல பணிகள் சுணக்கமாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருப்பதுதான். செயற் பொறியாளர்களுக்கான பதவி உயர்வுக்கான மூப்புப் பட்டியல் ஒப்புதல் அளிக்கப்பட்டும் கூட அவர்களுக்கு பதவி உயர்வு தராமல் அரசு அமைதி காத்து வருகிறதாம்.
அதேசமயம் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு கொடுத்து வரும் செயலும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. சமீபத்தில் பொதுப்பணித்துறையின் மின்சாரப் பிரிவைச் சேர்ந்த பெண் செயற்பொறியாளர் ஒருவருக்கு பணி நீட்டிப்பு கொடுத்துள்ளனர். இவர் ஆட்சி அதிகாரத்தில் உள்ள வலுவான ஒருவருக்கு வேண்டப்பட்டவர் என்று சொல்கிறார்கள்.
இந்த பணி நீட்டிப்பு தற்போது பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நேற்று சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள பொறியார்கள் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் செல்வின் சவுந்தரராஜன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பணி ஓய்வு பெற்ற செயற் பொறியாளருக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு மூலமாக மட்டுமே பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று 28ம் தேதி தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது. 30ம் தேதி மீண்டும் செயற்குழுவைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு தராமல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு தரப்படுவதால், பதவி உயர்வுக்கு காத்திருக்கும் பலருக்கு அது கிடைக்காமலேயே போகும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு முழு பலனும் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது என்பது பொறியாளர்களின் குற்றச்சாட்டாகும்.
படம்: எஸ். சம்பத் குமார்