திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்பு- திருமா, முத்தரசன் அறிவிப்பு!
திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விவசாயிகள் பிரச்சனைக்காக திமுக நாளை மறுநாள் கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது பிரமாண்டமாக தோற்றமளித்தது மக்கள் நலக் கூட்டணி. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தற்போது இதில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இடம்பெற்றுள்ளன.
தேமுதிக, தமாகா, மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் வரிசையாக வெளியேறிவிட்டன. இதனிடையே அண்மைக்காலமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுடன், திருமாவளவன் மற்றும் முத்தரசன் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.
சென்னையில் ரஜினிகாந்த் விவகாரம் தொடர்பாக மூவரும் கூட்டாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தனர். இதனிடையே டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்காக நாளை மறுநாள் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது.
இந்த கூட்டத்துக்கு பாஜக மற்றும் அதிமுகவின் இரு அணிகளுக்கும் திமுக அழைப்பு அனுப்பவில்லை. இதர கட்சிகள் அனைத்துக்கும் திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு கொடுத்து வருகின்றனர். இதனிடையே திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும் என்று திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.