கலவரத்தில் காவல்துறை அத்துமீறல்.. நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை.. மநகூ அறிவிப்பு
சென்னை கலவரத்தில் காவல்துறையினர் அத்துமீறியது குறித்து நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மநகூ அறிவித்துள்ளது. இதனை இன்று செய்தியாளர்களிடம் மநகூ தலைவர்கள் தெரிவித்தனர்.
சென்னை: நேற்று சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அது குறித்து நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் வன்முறை கலவரம் வெடித்தது. இந்த வன்முறையின் போது பொதுமக்களை அடிப்பது, வாகனங்கள், குடிசைகளுக்கு போலீசார் தீ வைப்பது என அத்துமீறலில் ஈடுபட்டதற்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, சென்னையில் நடைபெற்ற வன்முறையில் காவல்துறையினரே அத்துமீறியுள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறினார்கள். மேலும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் மநகூ தலைவர்கள் வெளியிட்டனர். வன்முறையை நியாயப்படுத்த போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
சென்னை கலவரம் குறித்தும் போலீசாரின் இந்த அத்துமீறல் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் மநகூ சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து ஜன. 28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்றும் மநகூ தலைவர்கள் அறிவித்துள்ளனர்.