திமுக- அதிமுக நட்புறவுக்கு எங்களது கூட்டணிதான் காரணம்.. திருமாவளவன்
அரியலூர்: திமுகவும், அதிமுக இடையே இணக்கமான நாகரீக மாற்றம் ஏற்பட எங்களது கூட்டணிதான் முக்கியக் காரணம். அவர்கள் நட்புறவாக இயங்குவதை வரவேற்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்திற்கு வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை திரும்ப நடத்த வலியுறுத்தி இந்த வாரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேர்தல் சட்டதிருத்தத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்வதை தடை செய்ய வேண்டும். இதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியும்.
தமிழக அரசியலில் திமுக - அதிமுக இடையே இணக்கமான நாகரீகமான மாற்றம் ஏற்பட எங்களது கூட்டணி முக்கிய காரணமாகும். அவர்கள் நட்புறவாக இயங்குவதை வரவேற்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவையற்றது. எங்கள் கூட்டணி தொடர்ந்து செயல்படும்.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் அவர்.