படு வேகமாக கரைந்து வரும் மக்கள் நலக் கூட்டணி!
சென்னை: மக்கள் நலக் கூட்டணி படு வேகமாக கரைந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இது காணாமல் போய் விடும் என்று சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை படு சுறுசுறுப்பாக, விறுவிறுப்பாக செயல்பட்டு வந்தது மக்கள் நலக் கூட்டணி. செல்பி எடுப்பது, டி சர்ட் போடுவது, முண்டாசு கட்டி முழக்கமிடுவது, வாக்கிங் போவது என கலக்கிக் கொண்டிருந்தனர் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்.
ஆனால் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு இவர்களின் செயல்பாடுகள் கூட்டாக இல்லை. குறிப்பாக தேமுதிக இவர்களை விட்டு வேகமாக விலகிச் சென்று வருகிறது. அதை விட முக்கியமாக விஜயகாந்த்தை கூட்டணி தலைவர்கள் சமீபத்தில் சந்திக்கச் சென்றபோது அவர் சரியான ரெஸ்பான்ஸ் தரவில்லையாம். வாங்க என்று கூட கூப்பிடவில்லை என்கிறார்கள்.
இதன் காரணமாக இப்போது இந்த கூட்டணி கலகலக்க ஆரம்பித்து விட்டது. ஜி.கே.வாசனும் இக்கூட்டணியில் தொடர ஆர்வம் காட்டவில்லை. எனவே தேமுதிக, தமாகா ஆகியவை தனித் தனிப் பாதையில் போக முடிவெடுத்து விட்டதாகவே கருதப்படுகிறது.
அதேபோல திருமாவளவன் தனிப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள். திமுக கூட்டணியில் திருமாவளவன் இணையக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் இறக்கை கட்டி பறக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கவுள்ளன.
தேமுதிக தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. அக்கட்சியினருடன் விஜயகாந்த் சீரியஸாக ஆலோசனை நடத்தி வருகிறார். வருகிற அத்தனை பேரும் கூட்டணி சரியில்லை என்று தான் சொல்லி வருவதால் நிச்சயம் அவர் கூட்டணிக்கு குட்பை சொல்வது உறுதி என்கிறார்கள்.
மதிமுகவின் நிலைப்பாடு குறித்து தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. மீண்டும் ஒரு தனிமைப் பயணத்திற்கு மதிமுக தயாராகி வருகிறது. தற்போதைய நிலையில் கூட்டணி என்ற பெயர்தான் இருக்கிறதே தவிர அதிகாரப்பூர்வமில்லாத வகையில் ஆளாளுக்கு ஒரு பக்கம் பிரிந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டணி இருக்குமா என்பதும் சந்தேகத்திற்குரியதாகவே பார்க்கப்படுகிறது.