அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்களில் எந்த கட்சிக்கு ம.ந.கூ. ஆதரவு ?
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி எந்த கட்சிக்கு ஆதரவு தரும்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 தொகுதி தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என்று அதன் ஒருங்கிணைப்பாளரான மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்தார். வைகோவின் இந்த அறிவிப்புக்கு மதிமுக தொண்டர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரவக்குறிச்சியிலாவது மதிமுக போட்டியிட்டிருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
யாருக்கு ஆதரவு?
தேர்தலை புறக்கணிக்கும் மக்கள் நலக் கூட்டணி, யாருக்கு ஆதரவு தரும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவை இந்த கூட்டணி ஆதரிக்க வாய்ப்பே இல்லை.
அதிமுக அல்லது தேமுதிக
திமுகவை தோற்கடிக்க அதிமுகவுக்கு மறைமுகமாக அல்லது நேரடியாக மக்கள் நலக் கூட்டணி ஆதரவு தரக் கூடிய வாய்ப்பு உள்ளது. 3 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடுவது என முடிவெடுத்து ஆதரவை கோரினால் அக்கட்சிக்கு ஆதரவு தருவது குறித்தும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பரிசீலிக்கலாம்.
பிரதிபலன்?
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. இதற்கு பிரதிபலனாக தேமுதிகவை மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரிக்கலாம்.
விஜயகாந்த் ஆலோசனை
இதனிடையே 3 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து 'ரகசியமாக' ஆலோசனை நடத்தி வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்த ஆலோசனைகளில் திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்தே போட்டியிடலாம் எனவும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.