வாட்ஸ் ஆப்பில் வினாத்தாள் அனுப்பிய வழக்கு: 4 ஆசிரியர்களுக்கு 2 நாள் போலீஸ் காவல்
ஓசூர்: ஓசூர் பள்ளி ஒன்றில் கணக்கு தேர்வு வினாத்தாளை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 கணித தேர்வு நடந்து கொண்டிருந்தபோது வினாத்தாளை போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய வழக்கில் ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயக் குமார், கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வினாத்தாள் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகந்தன்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி குற்றப்பிரிவு போலீசார் ஓசூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், 4 ஆசிரியர்களையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து ஆசிரியர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், தங்கள் பள்ளிகளின் மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்கவும், பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.