விதிகளை மீறி உறுப்பு தானம் பெற்றாரா சசிகலா கணவர் நடராஜன்? மூளைச்சாவு கிளப்பும் சர்ச்சை
சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீர, சிறுநீரகம் பொருத்தப்பட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சைகள் வெடித்துள்ளன.
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிகளை மீறி கல்லீரல் பொருத்தப்பட்டதா? என புதிய சர்ச்சையும் வெடித்துள்ளது.
சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தில் இருந்து எந்தப் பதிலும் வராததால், விபத்தில் இறந்த இளைஞர் ஒருவரின் உறுப்புகள் நடராஜனுக்குப் பொருத்தப்பட்டது. இதிலும் பல்வேறு மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன' என்கின்றனர் சில மருத்துவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடி வயலைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கார்த்திக் விபத்தால் மூளைச் சாவு அடைந்தார். அவருடைய உறுப்புகளைத்தான் நடராஜனுக்குப் பொருத்தியதாகத் தகவல் வெளியானது. ஆனால் நடராஜனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை அவருக்குத்தான் பொருத்தப்பட்டதாக கூறாமல் 74 வயது நபருக்கு என மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது.
உறவினர்களிடையே தேடுதல்
இதுகுறித்து மன்னார்குடி வட்டாரங்களில் விசாரித்த போது, நடராஜனின் ரத்த மாதிரியோடு பொருந்திப் போகிற நபரிடம் இருந்துதான் கல்லீரலையும் சிறுநீரகத்தையும் தானமாகப் பெற முடியும். அதன்படி, உறவினர்கள் வட்டாரத்தில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர்.
உறுப்புதான ஆணையத்துக்காக காத்திருப்பு
நடராஜனின் நெருங்கிய உறவு முறையில் இருந்த சுந்தரம் என்பவர் தானம் தருவதற்கு ஒப்புக் கொண்டார். அதேநேரம், அரசின் உறுப்பு தான ஆணையத்தில் இருந்து பதில் வரும் எனவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
தகவலுக்காக காத்திருப்பு
ஆணையத்தின் தலைவராக இருக்கும் மருத்துவர் பாலாஜியிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இவர்தான் ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் அடிபடுகிறவர்.
அக்கறை எடுக்கவில்லை என புகார்
மருத்துவர் பாலாஜி ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்கமானவர் என்பதால், நடராஜன் விஷயத்தில் போதிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம், மருத்துவர் முகமது ரேலாவின் தீவிர கண்காணிப்பால் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தநேரத்தில், அறுவை சிகிச்சையை முடித்தால் நன்றாக இருக்கும் எனத் தீர்மானித்ததால், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
நடராஜனுக்கு பொருத்தம்
அப்போதுதான், விபத்தில் கார்த்திக் என்பவர் மூளைச் சாவு அடைந்த தகவல் கிடைத்தது. அவருடைய ரத்த மாதிரியும் நடராஜனின் ரத்தத்தோடு ஒத்துப் போனது. அந்த இளைஞரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால் இது சாத்தியமானது. அறுவை சிகிச்சை முடிந்தாலும் இயல்பான நிலைக்குத் திரும்ப இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும். நடராஜன் குடும்ப உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் மட்டுமே உறுப்பு தானம் கிடைத்தது என நெகிழ்கின்றனர்.
கார்த்திக் உடல் சென்னைக்கு வந்தது எப்படி?
ஆனால் கார்த்தி மூளைச் சாவு அடைந்த விவகாரத்திலேயே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கார்த்தி கடந்த 30-ந் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் தலைக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூளைச்சாவடைந்துவிட்டதாக பெற்றோருக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் திடீரென கார்த்திக் உடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழிசையும் சந்தேகம்
ஏனெனில் பொதுவாக மூளைச் சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகளை மட்டுமே தானம் பெறப் போகும் நபருக்கு அளிப்பது வழக்கம். ஆனால், கார்த்திக்கின் மொத்த உடலையும் விமானத்தில் ஏற்றிக் கொண்டு சென்னை செல்லப்பட்டது எப்படி? யார் கார்த்திக் உடலையே சென்னைக்கு எடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தது? அப்படியானால் விபத்து நடந்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குள்ளேயே மூளைச்சாவு நிலைக்கு கார்த்திக் "தள்ளப்பட்டாரா"? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனைத்தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.