ஆர்.கே.நகரில் "ஸ்லீப்பர் செல்கள்" அதிகமாகிவிட்டனர்… அடித்து ஆடும் சி.மகேந்திரன்
சென்னை: அதிமுகவை எதிர்க்க தேர்தல் களத்தில் எதிரிகளே இல்லை... இது முதல்வர் ஜெயலலிதாவின் தகர்க்க முடியாத தன்னம்பிக்கை கருத்து... அப்படி சொன்னா எப்படி? தோல்வியோ வெற்றியோ நாங்க இருக்கோமே என்று கம்யூனிஸ்ட்டுகள் இடது மற்றும் வலது கரம் கோர்த்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
பணபலம், அதிகார பலம் இல்லை, கொள்கை பலம் உண்டு. அதை நம்பி முதன்முறையாக சி.எம் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கியுள்ளார் சி.பி.ஐ வேட்பாளர் சி.மகேந்திரன்(சி.எம்). 19 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, 1975 முதல் கடந்த 40 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக உள்ளார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் மாநிலத் தலைவராக இருந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளராக 18 ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர் முதன்முறையாக தேர்தல் களம் காண்கிறார்.
முதல் தேர்தலிலேயே முதல்வரை எதிர்த்து நிற்பதால் ஊடகங்களின் கவனத்திற்குரிய வேட்பாளராக இருக்கிறார். தேர்தல் பணிமனை அமைக்க கூட இடமில்லாத நிலையிலும், (அனைத்து இடங்களுமே அதிமுக வசமாகிவிட்டது) ஆர்.கே.நகரில் வீதி வீதியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
மாலை நேரத்தில் தேர்தல் பிரசார பணிக்கிடையே மழை குறுக்கிட சின்னதாய் ஒரு தடங்கல். மழையில் நனைந்தால் தோழர்களுக்கு காய்ச்சல் வந்து விடுமே என்பதால் சிலமணிநேரங்கள் பிரச்சாரத்தை ஒத்திப்போட்டு விட்டு ஓய்வெடுக்கக் கிளம்பிய நேரத்தில் நமது "ஒன் இந்தியா தட்ஸ் தமிழ்" இணையதளத்திற்கு சி.மகேந்திரன் அளித்த பிரத்யேக பேட்டி.
முதல் தேர்தல் களத்திலேயே முதல்வரை எதிர்த்து போட்டியிடுகிறீர்களே?
தேர்தல் களத்தில் நான் ஒரு துருவம்... அவர் ஒரு துருவம்... இதில் முதல்வர் என்பதால் தனி ஆர்வம் எதுவுமில்லை. இதுவரை கட்சிக்காக களப் பணியாற்றினேன். இப்போதுதான் கட்சிகொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க இடதுசாரிகளுக்கு பொறுத்தமான இடம் கிடைத்துள்ளது. எளிதாக எங்களின் கொள்கைகளை, கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பதைப்பற்றி கவலையில்லை. ஆனால் வெற்றியும் தோல்வியும் இங்கே வேறுமாதிரியாகப் பார்க்கப்படுகிறது. மன்னர் காலத்தில் நடந்த சம்பவங்கள் வேறு. இது ஜனநாயக ஆட்சி. வெற்றி அடைந்தவர்களுக்கு மாலை போடுவது, தோல்வி அடைந்தவர்களை நிராகரிப்பது என இப்போது நடைபெறுகிறது.
ஆர்.கே.நகரில் அதிமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதுதானே?
வெற்றி எவ்வளவு முக்கியமோ அதை அடைவதற்காக தேர்வு செய்த வழிமுறைகளும் முக்கியம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். ஆனால் வாக்காளர்களை மனநோயாளிகளாக மாற்றி, பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கிவிடுகின்றன அரசியல்கட்சிகள். ஓட்டுக்குப் பணம் பெற்றால் ஓராண்டு ஆண்டு தண்டனை என்கிறது தேர்தல் ஆணையம். ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் என்ன தண்டனை. இங்கே முதல் குற்றம் பணம் கொடுப்பதுதானே. இது முக்கியமான தேர்தல், கார்ப்பரேட் உலகமயம் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல எங்களுக்கு ஒரு களம் கிடைத்துள்ளது. வீதி வீதியாக வீடு வீடாக சென்று மக்களிடம் கூறி வாக்குகள் கேட்கிறோம். மத்திய, மாநில அரசுகள் எப்படி செயல்படுகிறது என்பதை நாங்கள் போட்டியிடுவதன் மூலம் வெளியே கொண்டு வருகிறோம்.
இடைத்தேர்தல் களத்தில் எதிரி பலம் வாய்ந்தவராக இருக்கிறாரே?
எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஆர்.கே.நகர் மக்களைப் பற்றிதான். படுபயங்கர கழிவுகள் உள்ளன. கொடுங்கையூர் குப்பைமலையால் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளனர். இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் இருக்கின்றனர். அதிமுகதான் இதற்கு பொறுப்பு. ஏனெனில் 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றும் இந்த குப்பை மலையைப் பற்றி கவலையில்லை.
பணபலம் படைபலத்திற்கு மத்தியில் உங்களுக்கான வரவேற்பு?
வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எங்களுக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கின்றனர். எல்லோரும் ஒதுங்கிய நிலையில் நாங்கள் போட்டியிடுவதால் எங்களின் தைரியத்தை பாராட்டுகின்றனர். கால்நடையாகவே அனைத்து பகுதிக்கும் சென்று வாக்கு கேட்கிறேன். ஒழுங்கான குடிதண்ணீர் இல்லை. சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதெல்லாம் மக்களை பாதித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் அதிமுகவினர் முகாமிட்டுள்ளதால் எரிச்சல் அடைந்துள்ள மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனாலும் ஏழ்மை சூழ்ந்திருப்பதால் பணம் கொடுத்து வாக்குகளைக் கவர்ந்து விடுகின்றனர்.
அனைத்து கட்சிகளும் ஒதுங்கிய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட முடிவு செய்தது ஏன்?
தேர்தல் போட்டியில் பிரதான இலக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் வெற்றி மட்டுமே தேர்தலில் இலக்கு அல்ல. வெற்றிகள், தோல்விகள் இவை எல்லாவற்றையும் கடந்து நாம் நம்பி ஏற்றுக்கொண்ட மக்களுக்கான கொள்கைகள் என்பதே மிக முக்கியம். தேர்தலும், வாக்குகளும் கடைச் சரக்காக மாற்றப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் பற்றி மக்களுடன் விவாதிக்க எங்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு என்பது மிகப் பெரிய வெற்றி இதற்காகவே இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடுகிறோம்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பலன் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
முதல்வரை தனிப்பட்ட முறையில் தாக்கி எந்த பிரச்சாரமும் செய்யப்போவதில்லை. நவீன பொருளாதாரக் கொள்கைகள், மதவாதம், ஊழல், தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், தொகுதி பிரச்சினைகளை முன் வைத்தும் பிரச்சாரம் செய்வோம். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறுகலான தெருக்கள், நிரந்தர வீடுகள் இல்லை, நலத்திட்டங்கள். மக்களுக்கான வாழ்வியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒரு குடும்பத்தில் இருப்பவருக்கு பணி கொடுத்தால் அது அந்த குடும்பத்திற்கு பலன். ஆனால் வேறு சில இலவசங்களைக் கொடுப்பது எப்படி சரியாகும். இதைப்பற்றியும், நீதியில் ஏற்பட்டுள்ள பலவீனம் பற்றியும் பிரச்சாரத்தில் முன்வைப்போம்.
2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் வியூகம் அமைத்துள்ளனரே?
கின்னஸ் சாதனை எதில் படைப்பது? வறுமை ஒழிப்பில் கின்னஸ் சாதனை படைக்கலாம். ஏழைகளுக்கு கல்வி கொடுப்பதில் கின்னஸ் சாதனை படைக்கலாம், மக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதில் கின்னஸ் சாதனை படைக்கலாம். ஒரு ஓட்டு வாங்கினாலும் வெற்றிதான். உலகத்தில் யாருமே வாங்காத அளவிற்கு வாக்குகளை பெற்று கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பது ஜனநாயகத்திற்கு அவமானம். இதற்காகவே அமைச்சர்கள் ஓடுகிறார்கள். இது சட்ட அத்துமீறல். பொய்யான முறையாகும்.
திமுக, தேமுதிகவினர் ஆதரவு இருக்கிறதா? தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியவர்கள் உங்களை ஆதரிப்பார்களா?
அதிமுகவை எதிர்க்கும் கட்சிகளின் வாக்குகள் எங்களுக்குத்தான் கிடைக்க வேண்டும். இதில் யாரும் நேரடியாக ஆதரவு கொடுக்கிறேன் என்றோ கேட்கவோ முடியாத சூழ்நிலை உள்ளது. இது இடைத்தேர்தல்தான், இதுவேறு 2016 சட்டமன்ற தேர்தல் வேறு. எனவே நேரடியாக ஆதரவைத் தெரிவிப்பதில் அந்தக்கட்சிக்களுக்கும் சங்கடம் இருக்கலாம்.
பிரச்சார களத்தில் என்னென்ன சங்கடங்கள் ஏற்படுகின்றன?
நாங்கள் வாக்கு சேகரிக்க ஊர்வலம் போகும் போது அவர்களும் அதே பகுதியில் இடையில் ஊர்வலம் வருகின்றனர். எங்களுக்கு என்று பணிமனை அமைக்க கூட இடமில்லை. ஏனெனில் அனைத்து இடங்களும் அதிமுக வசமாகிவிட்டது. கடைகள், வீடுகளை வாடகைக்குப் பிடித்து கும்பல் கும்பலாக தங்கியுள்ளனர்.
50 வாக்காளர்களுக்கு ஒரு ஆள் என வீட்டில் தங்கி அவர்களின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்கின்றனர். வாக்குக்காக மூளைச்சலவை செய்கின்றனர். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ‘ஸ்லீப்பர் செல்'போல தங்கியிருக்கின்றனர். இது கேவலமான அவமானகரமான விசயம்.
பணபலம், படைபலத்திற்கு இடையே உங்களுக்கான பலமாக எதை நினைக்கிறீர்கள்?
கம்யூனிஸ்ட்களிடம் பணபலம், அதிகார பலம் இல்லை. கொள்கை பலம் மட்டுமே உண்டு. அதை நம்பியே களம் இறங்குகிறோம். அதிமுகவினர் ஊர்வலமாக அழைத்துச் செல்பவர்களுக்கு காலையில் 200 ரூபாய் மாலையில் 200 ரூபாய் கொடுக்கின்றனர். ஏழ்மையில் சிக்கிய மக்களுக்கு இந்த பணம் ஒரு ஆதாரமாக இருக்கிறது. எனவேதான் வேலைக்கு போகாமல் ஊர்வலத்திற்கு போகின்றனர். அவர்களையும் குறை சொல்ல முடியாது.
ஆர்,கேநகரில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் ஓடுகின்றன. தேர்தல் அதிகாரிகள் உள்ள அலுவலகம் உள்ளது. ஆனாலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகள் கண்களை மூடிக்கொண்டுள்ளனர்.
நடுநிலையோடு நடக்க வேண்டும்
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையான நிலையில் இப்போது தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கிறார். இது மிகவும் முக்கியமானது. ஒரு மாநிலத்தின் முதல்வரே இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்திருப்பது இன்னொரு முக்கியத்துவம். தேர்தலை நடுநிலையோடு, நியாயமாக நடத்தவேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அந்த கடமையை அவர்கள் செய்வார்கள் என நம்புகிறோம்.