வேட்பு மனு தாக்கல் டைம் ஓவர்.. விஷாலுக்கு டோக்கன் கொடுத்து உட்கார வைத்த அதிகாரிகள்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்
Recommended Video
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சுயேச்சையாக டிடிவி தினகரன், விஷாலும் போட்டியிடுகின்றனர்.
இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ய தண்டையார்பேட்டை அலுவலகத்துக்கு வந்துள்ளார். சினிமா பிரபலம் என்ற அடிப்படையில் அவருக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் அனுப்பக் கூடாது என்று சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 110 பேர் வந்துள்ளதால் நேரத்தை அதிகாரிகள் நீட்டித்துள்ளனர். மாலை 3 மணிக்குள் வந்தவர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் தந்துள்ளனர். 68-ஆவது எண் டோக்கன் பெற்ற விஷால் வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்.
டோக்கன் பெற்றுள்ள அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய இரவு 8 மணி ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் நாளை பரிசீலனை செய்வர். வேட்புமனுக்களை வாபஸ் பெற 7-ஆம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலில் 7 முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆர்.கே.நகரில் குத்தாட்டம், கொண்டாட்டம் என தேர்தல் பிரச்சாரம் களைக் கட்ட தொடங்கிவிட்டது.