செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை பிரக்ஞானந்தா!
செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை சென்னை மாணவர் பிரகனாநந்தா பெற்றுள்ளார்.
Recommended Video
சென்னை: செஸ் போட்டிகளில் இளைய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற 2-ஆவது சிறுவனாகிறார் சென்னை மாணவர் பிரக்ஞானந்தா.
சென்னையை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களது மூத்த மகள் வைஷாலி. இளைய மகன் பிரக்ஞானந்தா. இவர் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு சிறு வயதிலிருந்தே செஸ் போட்டியில் ஆர்வம் இருந்ததால் அவரது தந்தையும் அவரை செஸ் பயிற்சியில் ஈடுபட வைத்தார். இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்று வரும் க்ரெடின் ஓபன் என்ற சர்வதேச செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார்.
அவர் 8-ஆவது சுற்றில் வெற்றியை ஈட்டியதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். மிக இளைய வயதில் இப்பட்டத்தை பெற்ற இரண்டாவது நபர் பிரக்ஞானந்தா. இவர் 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் உக்ரைனின் செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். பிரக்ஞானந்தாவின் திறமையை அறிந்த விஸ்வநாதன் ஆனந்த், அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன் சென்னையில் சந்திப்போம் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.