மாநில தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளால் உள்ளாட்சி தேர்தல் ரத்து- ஆர்.எஸ். பாரதி
சென்னை: மாநில தேர்தல் ஆணையம் செய்த பல குளறுபடிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்று திமுக எம்பியான ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில், நேற்று வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே திமுக அமைப்புச் செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்கை தொடுத்த ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது: இந்த தீர்ப்பின் மூலம் திமுகவின் நியாயமான கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவருவது தெரிய வந்துள்ளது. மேலும் பல இடங்களில் மாநில தேர்தல் ஆணையம் செய்திருந்த குளறுபடிகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு என்பது எஸ்சி, எஸ்டி, பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பானது. இதுதவிர வரும் 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வர உள்ளது. அதில் தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்படலாம். அப்போது அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
மேலும், தமிழக அரசு இந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்யுமானால் அதனை எதிர் கொள்ளவும் திமுக தயாராக இருக்கிறது. புதிதாக அறிவிக்கப்படும் தேர்தலை எதிர் கொள்ளவும் திமுக தயாராக இருக்கிறது என்று ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.