நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதியை திணித்து விட்டார்கள் - ராதாரவி குற்றச்சாட்டு
கரூர்: நடிகர் சங்க தேர்தலை போர்க்களம் போல் விஷால் மாற்றி வருகிறார். நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதியைத் திணித்து விட்டனர் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் மற்றொரு அணியினரும் என இரு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.
இதில் சரத்குமார் அணியை சேர்ந்த நடிகர் ராதாரவி மற்றும் குழுவினர் கரூர் மாவட்ட நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்ட கரூர் வந்தனர்.
பிடித்தவர்களுக்கே வாக்கு:
அப்போது அவர், "நடிகர் சங்க தேர்தல் என்றால் பொதுவாக ஒருவரையொருவர் கைகுலுக்கி கொண்டு அவரவருக்கு பிடித்தவர்களுக்கு வாக்கு அளித்து விட்டு போய் விடுவார்கள்.
போர்க்களமாக்க முயற்சி:
ஆனால் இந்த தேர்தலில் பாண்டவர் அணி என்று விஷால் தங்கள் அணிக்கு பெயர் வைத்து போர்க்களம் போல் சித்தரித்து உள்ளார். அப்படியானால் நாங்கள் என்ன கவுரவர்களா?.
ஆதரவாகவே இருப்போம்:
விஷால் சரித்திரம் தெரியாமல் பேசுகிறார். குழந்தை பருவத்திலேயே நாடக மேடையை பார்த்தவன் நான். நாடக நடிகர்களுக்கு சரத்குமார் அணி என்றும் ஆதரவாக இருக்கும்.
ஜாதியை நுழைத்து விட்டனர்:
நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதியை நுழைத்துவிட்டனர். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள். நாடக நடிகர்கள் சுயமரியாதை உடையவர்கள். அதனால் தான், தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக அந்த பராம்பரியத்தில் வந்தவர்கள் ஆட்சி செய்கின்றனர்.
கூட்டம் கூட்டுவதால் என்ன பயன்:
நாடக நடிகர்களை மட்டும் நேரில் சந்தித்து, வாக்கு சேகரித்தால் போதுமானது. ஆனால், விஷால் அணியினர், நாடக நடிகர்களை சந்திக்கச் செல்லும்போது, ஆயிரக் கணக்கான ரசிகர்களையும் சேர்த்துக் கொண்டு கூட்டம் கூட்டுகிறார்கள். இதனால் யாருக்கு லாபம். நடிகர் சங்கத் தேர்தலை போராக மாற்றிவிட்டனர். நடிகர்களுக்கு நன்மை கிடைக்க, எங்கள் அணியை வெற்றி பெறச் செய்யுங்கள்.
நிலம் கொடுத்தால் விலகுகிறேன்:
தென்னிந்திய நடிகர் சங்கத்தை நாடக நடிகர்கள் இல்லாத சங்கமாக மாற்ற விஷால் முயற்சிக்கிறார். நாடக நடிகர்களுக்கு நிலம் தருவதாக விஷால் கூறுகிறார். நாடக நடிகர்களுக்கு அவர் உடனே நிலம் கொடுத்தால், நான் போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.