ரஜினிகாந்த் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாம்... இப்போ வரக்கூடாது... ராதாரவி பொளேர்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு முன்னரே வந்திருக்கலாம்.. இப்போ வரக்கூடாது என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு இப்போது வரக்கூடாது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 30 ஆண்டுகாலமாக அரசியலுக்கு வரப் போவதாக வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கின்றன. ரஜினிகாந்தும் இதற்கு தூபம் போடுவது போல அவ்வப்போது செயல்பட்டும் வருகிறார்.
தற்போதும் கூட ரசிகர்களை திடீரென சந்திக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் ரஜினிகாந்த் மூலம் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறதோ என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ராதாரவி பேட்டி
இதனிடையே நியூஸ் 7 டிவி சேனலுக்கு ராதாராவி நேற்று பேட்டியளித்திருந்தார். அதில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு ராதாரவி அளித்த பதில்:
அரசியலுக்கு வரமாட்டார்
அய்யய்ய்ய... அவரை சும்மா அரசியலுக்கு வாங்க.. அரசியலுக்கு வாங்கன்னு... இங்க எவ்வளவு தலைவலி இருக்குன்னு அவருக்கு தெரியாதா? தெரியுமே.. .அவரெல்லாம் அரசியலுக்கு வரமாட்டார் என்பது என்னுடைய கணிப்பு
இப்ப வரவும் கூடாது
அவரு அரசியலுக்கு வந்திருக்கனும்... அதுக்கு ஒரு டைம் இருந்தது... அது போய்விட்டது... இப்ப அவரு வரக்கூடாது.. ஏன்னா அவரு ஒரு நல்ல மனிதனுங்க... அவரு ஒருவாட்டி என்னை கேட்டார்.. எப்ப கேட்டார்னா குரு சிஷ்யன் டைம்ல...
ரஜினிக்கு ஐடியா இருந்தது
ஒரு மலையில படப்பிடிப்பு.. கவுதமி அப்பதான் அறிமுகம்.. பல்லாவரம் பக்கத்தில்.. அப்ப என்கிட்ட ரஜினி கேட்டார்.. எப்படி ரவி தேர்தல்ல வந்தா எப்படி இருக்கும்?னு ... நான் அதுக்கு வந்தா உங்களை எல்லாரு திட்டுவானுங்க சார்... என்றேன்.
திட்டித்தானே ஆகனும்
நீங்க? என்றார்.. நானும் திட்டுவேன் சார் என்றேன். ஒருவேளை ரஜினிகூடவே நான் இருந்துட்டா நான் அவரை திட்டமாட்டேன்... அவரை எதிர்த்து போய் நிற்கும்போது அப்ப மைனஸ் பூராவும் பேசித்தான் ஆகனும்.. அது அரசியல் மேடை.