49 வாக்குகளில் தோற்ற அப்பாவு.. தர்ணா நடத்தியபோது கீழே பிடித்து தள்ளிய துணை ராணுவம்
நெல்லை: வாக்கு எண்ணும் மையத்தில் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மு. அப்பாவு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது துணை ராணுவத்தினர் அவரை வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை அரசுப் பொறியியல் கல்லூரியில் வைத்து அம்மாவட்டத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், தபால் வாக்குகளில் குழப்பம் உள்ளதாகக் கூறி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, முடிவுகளை அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி. சமயமூர்த்தி, மாநகர காவல் ஆணையர் திருஞானம் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து ஆலோசனை நடத்தினர். தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் நிலவரம் குறித்து தகவல் தெரிவித்து ஆலோசனை கேட்கப்பட்டது.
இந்நிலையில், திமுக வேட்பாளர் அப்பாவு, வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார். தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதில் குளறுபடி இருப்பதாகவும், தகுதியானவை நிரகாரிக்கப்பட்டதாகவும் புகார் கூறினார். இதையடுத்து, 21 சுற்றுகளின் விவரங்களும் மீண்டும் ஒருமுறை தெரிவிக்கப்பட்டது. தபால் வாக்குகளும் 2 முறை எண்ணப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளர்தான் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை ஏற்க முடியாது எனக் கூறி அப்பாவு வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து, துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு அதிமுக, திமுக முகவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், திமுக வேட்பாளர் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் அவரை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து துணை ராணுவத்தினர் இழுத்துக்கொண்டு சென்றனர். ஒருகட்டத்தில் அவரை பிடித்து கீழே தள்ளினர்.
2வது கட்ட பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார்தான், அப்பாவுவை ஓடிவந்து தூக்கிப்பிடித்தனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அப்பாவு, நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அங்கிருந்து அவரை காவல் துறையினர் வெளியேற்றினர்.
170 வாக்குகளில் நான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்றார் அப்பாவு. அப்பாவு ராதாபுரம் தொகுதியில் சுயேச்சையாகவும், பிறகு திமுக சார்பிலும் எம்.எல்.ஏவாக பணியாற்றியவர். டிவி ஷோக்களில் திமுக சார்பில் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.